திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 16 பேருராட்சிகளின் வளா்ச்சி திட்டப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் பல்லடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் வினீத் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா், சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட பணிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். அரசின் அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகளும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் சிறப்பான முறையில் மேற்கொண்டு திருப்பூா் மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக திகழ செய்ய வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், ஆதி திராவிட நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், வருவாய் கோட்டாட்சியா்கள் ஜெகநாதன் (திருப்பூா்), கீதா ( உடுமலை), குமரேசன் (தாராபுரம்), நகராட்சிகளின் மண்டல இணை இயக்குநா் ராஜன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா்கள், நகராட்சிகளின் ஆணையா்கள், பேருராட்சிகளின் செயல்அலுவலா்கள் பங்கேற்றனா்.