தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக திருப்பூரில் அனைத்து சாலைகளும் 3-வது வார ஞாயிற்றுக்கிழமையும் வெறிச்சோடியது.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றின் 3-வது அலை வேகமாகப் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையும் அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி பின்னல் நகரமான திருப்பூரில் கடந்த ஜனவரி 9, 16 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 3-வது வார ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்ததால் சாலைகள் அனைத்தும் வாகனப் போக்குவரத்து இல்லாததால் வெறிச்சோடிக் காணப்பட்டன.
திருப்பூர் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம், தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, அவிநாசி சாலை, மங்கலம் சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. அதே வேளையில், பால் விநியோகம், பெட்ரோல் நிலையங்கள், நாளிதழ் விநியோகம், மருந்தகங்கள் ஆகியன வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.
திருப்பூரில் உள்ள ஆயிரக்கணக்கான பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்களும், காதர் பேட்டையில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. மேலும், மாநகரில் உள்ள பெரிய உணவகங்களில் மட்டும் வாடிக்கையாளர்களுக்கு பார்சல் சேவை வழங்கப்பட்டது.
ரயில் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்:
வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு ரயில் மூலமாக வந்துள்ள 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேருந்து வசதி இல்லாததால் ரயில் நிலையங்களிலேயே குடும்பத்துடன் தங்கியுள்ளனர்.