திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் 20 இடங்களில் நகர்ப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையம் கட்டும் பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடக்கிவைத்தார்.
திருப்பூர் மாநகராட்சி 3 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட வார்டு எண் 36 அம்மன் நகர் பகுதியில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையம் கட்டும் பணியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடக்கிவைத்துப் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் திருப்பூர் மாவட்டத்தில் ஏழை எளியோர், பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவியர்கள், முதியோர்கள் மற்றும் திருநங்கைகள் என அனைவரும் பயனடையும் வகையில் அரசின் திட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 4 இடங்களில் முதல்கட்ட பரிசோதனைக்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மருத்துவர், செவிலியர் கொண்ட 2 குழுக்கள் வீடு வீடாகச் சென்று தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மொத்தமாக 20 இடங்களில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, தாட்கோ மூலம் 32 பயனளிகளுக்கு 1.60 கோடி மதிப்பீட்டில் தொழில் தொடங்க மாணியத்துடன் கூடிய கடனுதவிகளை வழங்கியதுடன், தமிழ்நாடு நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் பணியற்றுவதற்கு 13 நபர்களுக்கு அடையாள அட்டைகளையும் அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி, மண்டல உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.