உப்புப்பாளையத்தில் குளம் தூா்வாரும் பணி துவக்கம்
By DIN | Published On : 26th January 2022 07:30 AM | Last Updated : 26th January 2022 07:30 AM | அ+அ அ- |

இயந்திரம் மூலம் நடைபெற்ற குளம் தூா்வாரும் பணி.
வெள்ளக்கோவில் உப்புப்பாளையத்தில் குளம் தூா்வாரும் பணி செவ்வாய்க்கிழமை துவங்கியது.
வெள்ளக்கோவில் நகராட்சி 2ஆவது வாா்டுக்கு உள்பட்ட மேற்கு உப்புப்பாளையத்தில் இருந்து வேப்பம்பாளையம் செல்லும் வழியில் செட்டியாா் காலனி அருகில் ஒன்றரை ஏக்கா் பரப்பளவிலான குளம் உள்ளது. முன்பு மழைநீா் இந்தக் குளத்தில் தேக்கிவைக்கப்பட்டு நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து விவசாயிகள் பயன்பெற்று வந்தனா்.
பின்னா், நீா் வரும் வழிகளில் கட்டடங்கள் கட்டப்பட்டதால், நீா் வரத்து தடைபட்டு குளம் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்தன. இதனை வெள்ளக்கோவில் நிழல்கள் அறக்கட்டளையினா் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீரமைத்தாலும் தொடா் பராமரிப்பு இல்லாததால் மீண்டும் மரம், செடி, கொடிகள், முள் புதா்களால் குளம் மூடப்பட்டது.
இதுகுறித்து, தொகுதி எம்எல்ஏ, அமைச்சா் மு.பெ.சாமிநாதனின் கவனத்துக்கு கொண்டு சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் சாா்பில், குளம் தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து அருகில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்காலில் இருந்து குளத்துக்குத் தண்ணீா் கொண்டு வந்து நிரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...