அவிநாசி: அவிநாசி அருகே போத்தம்பாளையம் பெரிய கருப்பராயன் கோயில் திருவிழாவுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக் கோரி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
இது குறித்து அவிநாசி அருகே ராயர்பாளையம், சுள்ளிப்பாளையம், வடுகபாளையம் ஆகிய பகுதி மக்கள் திரண்டு வந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறிருப்பதாவது:
எங்கள் சமூகத்தை சேர்ந்த மக்கள் திருப்பூர், ஈரோடு, கோவை என பல்வேறு பகுதியில் வசித்து வருகிறோம். நாங்கள் வழிபட்டு வரும் போத்தம்பாளையம் பெரிய கருப்பராயன் கோயிலுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிடாய்கள் நேர்த்திக் கடனாக செலுத்த வேண்டி உள்ளது.
இந்நிலையில் இக்கோயில் செவ்வாய்க்கிழமை சாட்டப்பட்டு ஆடி மாதம் 25 ஆம் தேதி திருவிழா நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திருவிழா நடத்த வட்டாட்சியர் தடை விதித்து உள்ளதாக கூறி பூசாரிகள் இன்று கோயிலுக்கு வர மறுத்து விட்டார்கள். இதனால் நாங்கள் மன வேதனையுடன் உள்ளோம். திருவிழா நடத்துவதற்கு 5 குடும்பத்தினர் மட்டுமே ஒத்துழைக்காமல் உள்ளனர்.
மீதமுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திருவிழா நடத்த மகிழ்ச்சியோடு காத்திருக்கிறோம். மேலும் நேர்த்திக் கடனுக்காக 4 ஆண்டுகளுக்கு மேலாக ஆடுகளை வளர்த்து வருகிறோம். இனிமேலும் அதை வளர்க்க எங்களால் இயலாது.
இதையும் படிக்க: கடலூரில் பள்ளி மாடியிலிருந்து விழுந்து தோட்டக்காரர் சாவு
திருவிழா நடத்தாமல் விட்டாலும் சாமி குற்றம் ஆகிவிடும். ஆகவே திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் ராஜேஷ், திருவிழா நடத்த ஒத்துழைக்காத குடும்பத்தினர் உள்பட இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.