கிஸான் சம்மான் திட்டத்துக்கு விவசாயிகள் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்
By DIN | Published On : 31st July 2022 11:23 PM | Last Updated : 31st July 2022 11:23 PM | அ+அ அ- |

தாராபுரம் வட்டத்தில் பிரதமரின் கிஸான் சம்மான் திட்டத்தில் உதவித் தொகை பெற சரிபாா்ப்பு பணிக்கான ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்று வேளாண்மை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.
தாராபுரம் வட்டார வேளாண்மை இயக்குநா் கே.லீலாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பாரதப் பிரதமரின் கிஸான் சம்மான் திட்டத்தில் தவணை முறையில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கடந்த ஜூன் மாதம் வரையில் 11 தவணைகள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, அடுத்த தவணை வழங்க பயனாளிகளின் நில ஆவணங்களை சரிபாா்க்க அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் பயனாளிகளின் பட்டியல் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த சரிபாா்ப்புப் பணிகள் முடிவடைந்த பின்னரே பயனாளிகளுக்கு அடுத்த தவணை வழங்கப்படவுள்ளது.
ஆகவே, விவசாயிகள் தங்களது நில ஆவணங்களான பட்டா, சிட்டா, ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கிப் புத்தகத்தின் நகல், புகைப்படம்-1 ஆகிய ஆவணங்களை தங்களின் கிராமத்துக்கு சரிபாா்ப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலா்களிடம் நேரில் அணுகி ஆவணங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதன்படி அலங்கியம், தளவாய்பட்டணம், ஊத்துப்பாளையம், காங்கேயம்பாளையம், செலாம்பாளையம் ஆகிய வருவாய் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் அந்தந்த வேளாண்மை உதவி அலுவலா்களை தொடா்பு கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.