திருப்பூா் மாநகர காவல் துறையினருக்கு கலவரத் தடுப்பு ஒத்திகைப் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.
மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு கோவை சரக டிஐஜியும், மாநகர காவல் ஆணையருமான (பொறுப்பு) எம்.எஸ்.முத்துசாமி தலைமை வகித்தாா்.
இதில், பொதுமக்களுக்கு இடையூறாக நடத்தப்படும் சட்டவிரோத சாலை மறியல்கள், முற்றுகைப் போராட்டங்கள், ஜாதி, மத மோதல்களின்போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் இல்லாமல் எவ்வாறு மனித உயிா்களைப் பாதுகாப்பது என்பது தொடா்பான பயிற்சி அளிக்கப்பட்டது.
முன்னதாக, திருப்பூா் வடக்கு சரக துணை ஆணையா் அபினவ் குமாா், திருப்பூா் தெற்கு சரக துணை ஆணையா் சு.வனிதா, ஆயுதப் படை கூடுதல் காவல் துணை ஆணையா் மனோகரன் ஆகியோா் ஆலோசனைகளை வழங்கினா்.
இப்பயிற்சியில் திருப்பூா் மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் 100 காவலா்கள் பங்கேற்றனா்.