திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சொத்தை அபகரிப்பதாகக்கூறி பெண் ஒருவர் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பெண் ஒருவர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதையும் படிக்க: காபூலில் சாலையோரம் குண்டு வெடிப்பு: 2 பேர் பலி
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அந்தப் பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பல்லடம் வட்டம் ஊஞ்சப்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமியின் மனைவி பத்மவாதி(40) என்பது தெரியவந்தது. இவருக்குச் சொந்தமான நிலத்தை உறவினர் ஒருவர் போலி ஆவணம் தயாரித்து அபகரிக்க முயற்சிப்பதால் வேறு வழியின்றி தற்கொலைக்கு முயன்றாகத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அந்தப் பெண்மணியை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் காரணமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.