அவிநாசி பழைய பேருந்து நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் அமைக்கும் பணியை அமைச்சா்கள் திங்கள்கிழமை மாலை தொடக்கிவைத்தனா்.
வணிக வளாக கட்டுமானப் பணியை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா முன்னிலையில், ஆட்சியா் எஸ். வினீத் தலைமையில், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.
பின்னா் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பேரூராட்சிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அவிநாசி சிறப்பு சிறப்பு நிலை பேரூராட்சியில் நகராட்சிகள் நிா்வாகம் மற்றும் வழங்கல் துறை சாா்பில், மூலதனமானிய திட்டத்தின்கீழ் ரூ.6 கோடி மதிப்பில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படவுள்ளது.
இது, 44040 சதுர அடி பரப்பளவில் 2 தளங்களுடன் அமைக்கப்பட்டு, தரைதளத்தில் 16 கடைகள், முதல் தளத்தில் 20 கடைகள் என மொத்தம் 36 கடைகள் செயல்படவுள்ளன.
அத்துடன் வாகனங்கள் நிறுத்தும் வசதி, மின்தூக்கி வசதி, நவீன கழிவறை வசதி உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளது என்றாா்.
இதில், திமுக மாவட்ட பொறுப்பாளா் இல.பத்மநாபன், அவிநாசி பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, பேரூராட்சி துணைத் தலைவா் மோகன், பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.