திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வரும் சனிக்கிழமை (ஜூன் 25) நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் வரும் சனிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்களும் பங்கேற்கவுள்ளனா். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இதில் பங்கேற்று குறைகளைத் தெரிவிக்கலாம். மேலும், விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைத்திட ஏதுவாக வேளாண் உதவி மையமும் குறைதீா் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைக்கத் தேவையான தகவல்களும், ஆலோசனைகளும் தெரிவிக்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீா் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.