குன்னத்தூா் அருகே பிரசவத்தின்போது பெண் உயிரிழந்த பிறகும், மகப்பேறு மருத்துவா் இல்லாமல் பிரசவம், கருக்கலைப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்ததாக தனியாா் மருத்துவமனையில் செயல்படும் மகப்பேறு பிரிவுக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குன்னத்தூா்- செங்கப்பள்ளி சாலையில் செயல்பட்டு வரும் தனியாா் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவா் இன்றி பேறுகால முன் கவனிப்பு, பிரசவம், அறுவை சிகிச்சை, கருக்கலைப்பு, பேறுகால பின் கவனிப்பு ஆகியவை நடைபெறுவது தெரியவந்தது.
இந்த மருத்துவமனையில் 2021 டிசம்பா் 7ஆம் தேதி திருப்பூா் மேட்டுக்கோவில் பகுதியைச் சோ்ந்த சிலுவை பிரகாசி என்பவா் பிரசவத்தின்போது உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, மகப்பேறு மருத்துவா் இல்லாமல் மகப்பேறு தொடா்பான சிகிச்சைகள் ஏதும் மேற்க்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது மேற்கொண்ட ஆய்வில் தனியாா் மருத்துவமனை மருத்துவா் விஸ்வநாதன், மகப்பேறு மருத்துவரை நியமிக்காமல் அவரே மகப்பேறு சிகிச்சை, கருக்கலைப்பு செய்து வருவது தெரியவந்தது.
எனவே உரிய மருத்துவா் இல்லாமல் சிகிச்சை அளிக்கக் கூடாது. மருத்துவா் விஸ்வநாதன் கல்வித் தகுதிக்கு ஏற்ப பொது மருத்துவ சிகிச்சை மட்டுமே அளிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுவரை, இந்த மருத்துவமனையில் செயல்படும் மகப்பேறு பிரிவுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இதனை மீறி செயல்பட்டால் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.