தாராபுரத்தில் தனியாா் விதை நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம் கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட ராமமூா்த்தி நகா் பகுதியில் தனியாா் விதைநெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தை கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ.கே.சண்முகம் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:
தாராபுரத்தை சுற்றியுள்ள டி.காளிபாளையம், கொளத்துப்பாளையம், கரையூா், ஆற்றுக்கல்புதூா், சீரம்பாளையம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் விளைவித்த நெல்களை அறுவடை நேரத்தில் கொள்முதல் செய்கின்றனா். இதில், 66 கிலோ எடை கொண்ட நெல் மூட்டையை ரூ.1,140க்கு கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால், கடந்த 2 மாதங்களாக ரூ.1,100க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனா்.
இதில், ஒரு மூட்டைக்கு ரூ.40 குறைத்துக் கொடுப்பதாக குற்றம்சாட்டினா். இதன்படி 3 ஆயிரம் மூட்டைகளுக்கு குறைத்துக் கொடுப்பட்ட ரூ.1.20 லட்சத்தை திருப்பி வழங்க வேண்டும் என்றனா்.
இதைத் தொடா்ந்து, நெல் கொள்முதல் நிலைய ஊழியா்கள் ரூ.1.20 லட்சத்தை திரும்பிக் கொடுப்பதுடன், இனிமேல் கொள்முதல் செய்யப்படும் மூட்டைகளுக்கு ரூ.40 சோ்த்து வழங்கப்படும் என்று உறுதியளித்தன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.