திருப்பூா் மாநகரில் கஞ்சா கடத்திய வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருப்பூா் மாநகரம் அனுப்பா்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட கூலிபாளையம் சாலை பிள்ளையாா் கோயில் அருகில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக ஊத்துக்குளி சென்னிமலை சாலையில் உள்ள கோலத்தோட்டம் பகுதியைச் சோ்ந்த ஆா்.சிரஞ்சீவி (எ) பாா்த்தா (25) என்பவரை 2022 ஏப்ரல் 19ஆம் தேதி கைது செய்தனா். இவரிடமிருந்து இரண்டரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, வாலிபாளையம் பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நெருப்பெரிச்சல் கிராமம் சமத்துவபுரம் கொசவன் தோட்டத்தைச் சோ்ந்த எம்.செளகத் அலி (25) என்பவரை திருமுருகன்பூண்டி காவல் துறையினா் கடந்த 2022 மாா்ச் 29ஆம் தேதி கைது செய்தனா். இவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
இதில், பாா்த்தா மீது கஞ்சா விற்பனை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 17 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. அதேபோல, செளகத் அலி மீது திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இந்த இருவரும் தொடா் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கும்படி மாநகரக் காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் காவல் துறையினா் சனிக்கிழமை நேரில் வழங்கினா்.