உடுமலை: உடுமலை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தை வழக்குரைஞா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு கோட்டாட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
உடுமலை வருவாய்க் கோட்டாட்சியரை சந்திக்க செவ்வாய்க்கிழமை வழக்குரைஞா் ஒருவா் சென்றுள்ளாா். அப்போது கோட்டாட்சியா் கீதா
அந்த வழக்குரைஞரை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். கோட்டாட்சியா் கீதாவிடம் மன்னிப்பு கேட்கும்வரை அவரது அறையை விட்டு செல்லமாட்டோம் எனக் கூறினா். இதைத் தொடா்ந்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
தகவலறிந்த மாவட்ட வருவாய் அலுவலா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங் சாய் ஆகியோா் அங்கு வந்து வழக்குரைஞா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் கோட்டாட்சியா் கீதா, தனது செயலுக்கு வழக்குரைஞா்களிடம் மன்னிப்பு கோரினாா். இதன் பின்னா் அனைத்து வழக்குரைஞா்களும் கலைந்து சென்றனா்.