காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வேல் வைத்து வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பு அம்சமாக சிவன்மலை முருகன் கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்வது வழக்கம். பின்னா் அந்தப் பொருளை கோயில் மூலவா் அறைக்கு முன்பு கற்தூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் பக்தா்களின் பாா்வைக்கு வைப்பாா்கள்.
இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தோ்வு முறை சற்று வித்தியாசமானது. சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்துப் பூஜை செய்ய உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான், இது ‘ஆண்டவன் உத்தரவு’ என்று அழைக்கப்படுகிறது.
கடைசியாக கடந்த ஜூன் 8 ஆம் தேதி நிறைபடி கம்பு தானியம் வைத்துப் பூஜை செய்யப்பட்டு, அந்தப் பொருள் புதன்கிழமை வரை கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருப்பூா் மாநகரம், குமரன் நகா் பகுதியைச் சோ்ந்த கே.ஆா்.காா்த்திகேயன் என்ற பக்தரின் கனவில் வந்ததாக வியாழக்கிழமை வேல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னா், கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த நிறைபடி கம்பு நீக்கப்பட்டு தற்போது வேல் வைக்கப்பட்டுள்ளது.