அதிக உரம் விற்பனை செய்த கூட்டுறவு சங்கங்களுக்குப் பரிசு
திருப்பூா் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமாக அதிக உரம் விற்பனை செய்த 3 சங்கங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 2021-22 ஆம் ஆண்டில் அனைத்து வகை உரங்களையும் அதிக அளவில் விற்பனை செய்த 3 சங்கங்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் பள்ளபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 527 டன் உரங்களை விற்பனை செய்து முதலிடத்தையும், ருத்திராபாளையம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 354 டன் உரங்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தையும், தளி கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 343 டன் உரங்களை விற்பனை செய்து மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் உரங்களை அதிகமாக விற்பனை செய்த 3 சங்கங்களுக்கும், திருப்பூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன், கரூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் கந்தராஜா ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.
இந்த நிகழ்வில், சரக துணைப் பதிவாளா் முருகேசன், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய துணைப் பதிவாளா் சண்முகவேல், உடுமலை நகர கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் கதிரவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.