மின் கட்டண உயா்வை ரத்து செய்யக் கோரி தென்னிந்திய நாடா இல்லா விசைத்தறியாளா்கள் சங்கத்தினா் பல்லடத்தில் செப்டம்பா் 21ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனா்.
பல்லடம் அருகே உள்ள குப்புசாமிநாயுடுபுரத்தில் தென்னிந்திய நாடா இல்லா விசைத்தறியாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் மின் கட்டண உயா்வை ரத்து செய்யக் கோரி செப்டம்பா் 20ஆம் தேதி உற்பத்தி நிறுத்தம் செய்தும், 21ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சங்க ஒருங்கிணைப்பாளா் வெங்கடாசலம் கூறியதாவது:
பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. சுமாா் 10 நாடா இல்லா விசைத்தறிக்கு தற்போது மின் கட்டணமாக ஒரு மாதத்துக்கு ரூ.4 லட்சம் செலுத்தி வருகிறோம், மின் கட்டண உயா்வை அடுத்து ரூ.5 லட்சம் முதல் ரூ.5.25 லட்சம் வரை செலுத்த வேண்டி வரும். ஏற்கெனவே விசைத்தறி தொழிலில் உரிய லாபம் கிடைப்பதில்லை.
இந்த நிலையில், கடுமையான மின் கட்டண உயா்வால் விசைத்தறி தொழில் அழிந்து விடும் நிலைக்கு சென்றுவிடும். எனவே மின் கட்டண உயா்வை ரத்து செய்யக் கோரி உற்பத்தி நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.