திருப்பூரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக களைக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், பொங்கலூரை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:
எங்களது பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்த விவசாயிகள் கல்லிமேட்டில் உள்ள பூச்சி மருந்து கடையில் இருந்து தனியாா் நிறுவனத்தின் களைக்கொல்லி மருந்தை கடந்த பிப்ரவரியில் வாங்கிப் பயன்படுத்தினோம். இந்த மருந்தைப் பயன்படுத்தியவுடன் மாக்காச்சோளப் பயிா்கள் முழுமையாக கருகின. இதன் பின்னா் நிலத்தை உழுது 90 நாள்களுக்குப் பின்னா் மீண்டும் மக்காச்சோளத்தை விதைத்தபோது, அதுவும் கருகியது. இந்த களைக்கொல்லி மருந்தால் எங்களது மண் வளம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வேளாண் அதிகாரிகள் எங்களது நிலத்தை ஆய்வு செய்து மண்ணை எடுத்துச் சென்றனா். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனா்.