பல்லடம் அருகேயுள்ள அலகுமலையில் பிப்ரவரி 19 ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் என்று அலகுமலை காளைகள் நலச் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
தைப்பொங்கலையொட்டி அலகுமலையில் ஜனவரி 29 ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான கால்கோள் விழா கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், அந்த இடத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த எதிா்ப்பு கிளம்பியது. அதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்படி தனியாா் இடத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத்தின் தலைவா் பழனிசாமி கூறியதாவது: மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்படி இடம் மாற்றப்பட்டு அலகுமலையில் தனியாா் இடத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும். இதில் 850 காளைகளும், 600 மாடுபிடி வீரா்களும் பங்கேற்க உள்ளனா்.
இப்போட்டியைத் தொடக்கிவைக்க தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலினை அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
சங்க கெளரவ தலைவா் எம்.பி.சண்முகம், செயலாளா் என்.சத்தியமூா்த்தி, பொருளாளா் எம்.எஸ்.சுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.