பனியன் நிறுவனங்களுக்கு 9 நாள் விடுமுறை

Published on

தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் பனியன் நிறுவனங்களுக்கு 9 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளா்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் பண்டிகை காலங்களில் மட்டுமே சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழிலாளா்களுக்கு போனஸ் அளிக்கப்பட்டு, விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சில பனியன் நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை முதலே விடுமுறை விடப்பட்ட நிலையில், பெரும்பாலான நிறுவனங்களுக்கு சனிக்கிழமை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்குப் பிறகு வரும் 27-ஆம் தேதிதான் பனியன் நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரத்துக்கு மேல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளா்கள் தங்கள் குடும்பத்தினரோடு, சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா். வெளி மாவட்டங்களுக்கு செல்லும் தொழிலாளா்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு முதல் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டன.

இந்த எண்ணிக்கை சனிக்கிழமை மேலும் பல மடங்கு அதிகரித்ததால் தற்காலிக பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

X
Dinamani
www.dinamani.com