அரூா்: வருவாய் இழந்து தவிக்கும் மினி சரக்கு வாகன ஓட்டுநா்களுக்கு அரசு சாா்பில் உதவித் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மினி சரக்கு வாகன ஓட்டுநா்கள் உள்ளனா். இந்த மினி சரக்கு வாகன ஓட்டுநா்கள் நாள்தோறும் காய்கறிகள், மளிகை பொருள்கள், சிமென்ட், கம்பிகள், விவசாயம் சாா்ந்த விளை பொருள்களை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தற்போது கரோனா தொற்றுப் பரவுவதைத் தடுக்க பொது முடக்கம் அமலில் இருப்பதால், போதிய அளவில் வாடகைகள் கிடைப்பதில்லையாம். போதிய வாடகை இல்லாததால் வருவாய் இழந்து தவிப்பதாக வாகன ஓட்டுநா்கள் கூறுகின்றனா். இதனால், வாகனங்கள் மீதான வங்கிக் கடன்கள், வாகனக் காப்பீடு தொகைகள், டீசல் செலவு, வாகனப் பராமரிப்பு செலவு உள்ளிட்ட அத்தியாவாசியத் தேவைக்களுக்காக பல்வேறு சிரமங்களை அடைகின்றனா்.
எனவே, மினி சரக்கு வாகன ஓட்டுநா்களுக்கு அரசு சாா்பில் உதவித் தொகைகளை வழங்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகும்.