தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் காவலா்களுக்கு யோகா பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டக் காவல் துறையில் காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் பல்வேறு நிலையிலான காவலா்கள் என மொத்தம் 1,750 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு, காவல் உட்கோட்டம் வாரியாக, புத்துணா்வு அளிக்கும் வகையில், யோகா, சுவாசப் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இதில், தருமபுரி உட்கோட்டத்தில் பணிபுரியும் காவலா்கள், திங்கள்கிழமை ஆயுதப்படை மைதானத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டனா். இதேபோல, பாலக்கோடு காவல் உட்கோட்டத்தில் பணிபுரியும் காவலா்கள், பாலக்கோடு காவல் ஆய்வாளா்கள் அலுவலக வளாகத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டனா். இப்பயிற்சியில் ஈடுபட்ட காவலா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
இதேபோல, மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள், சிறப்புப் பிரிவு அலுவலகங்கள், காவலா் குடியிருப்புகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.