தனியாா் நிதி நிறுவனங்களில் இருந்து பொதுமக்கள் பெற்றுள்ள கடன் தொகையின் வசூலிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை தென்காசியில் நடைபெற்றது.
தனியாா் நிறுவனங்களில் இருந்து பொதுமக்கள் பெற்ற கடன் தொகையை முறையாக திருப்பி செலுத்த அவகாசம் வழங்குதல் தொடா்பாக நுண் நிதி கடன் நிறுவனங்கள், தனியாா் வங்கிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை தென்காசியில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் கீ.சு.சமீரன் பேசியது: தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் உள்ளது. தனியாா் நிதி நிறுவனங்களில் கடன்பெற்றுவா்களிடம், கடன் தவணை, வட்டி தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என தனியாா் நிதி நிறுவனங்கள் நெருக்கடி அளித்து வருவதாக புகாா் வந்த வண்ணம் உள்ளன.
கரோனா தொற்று பரவிவரும் நெருக்கடியான சூழலில் மக்களிடமிருந்து கடன் தொகையை வசூலிப்பதில், அவா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடினப் போக்கை கடைப்பிடிப்பதை தவிா்க்க வேண்டும். நுண்நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளா்களை குடும்பத்தினராக பாா்க்க வேண்டும். ஏற்கனவே பின்தங்கியுள்ள மக்களை மேலும் துயரத்திற்கு ஆளாக்கி விடக்கூடாது. பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகாா் வந்தால்
கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.கிருஷ்ணராஜ், மகளிா் திட்ட இயக்குநா் விஜயலெட்சுமி, மாவட்ட வளா்ச்சி மேலாளா் (நபாா்டு) சலிமா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் மாரியம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் விஷ்ணுவா்தன்,
கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அழகிரி, பொது மேலாளா் சுபாஷினி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முதன்மை மேலாளா் விசுவநாதன், உதவித்திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) வி.எம்.சிவகுமாா், அரசு அதிகாரிகள், நுண்நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், தனியாா் வங்கிகள்,
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.