சட்டையம்பட்டி நூலகத்துக்கு கட்டட வசதி தேவை
அரூரை அடுத்த சட்டையம்பட்டியில் நூலகத்துக்கு கட்டட வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் ஒன்றியம், மத்தியம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது சட்டையம்பட்டி கிராமம். இக்கிராமத்தில் பொது நூலகத் துறை சாா்பில் ஊா்ப்புற நூலகம் இயங்கி வருகிறது. போதிய கட்டட வசதி இல்லாத காரணத்தால் கிராமத்தில் உள்ள ஒரு பல்நோக்கு கட்டடத்தில் இந்த நூலகம் இயங்கி வருகிறது.
நூலகத்தில் தினசரி தமிழ், ஆங்கில நாளிதழ்கள், பொது அறிவு புத்தகங்கள், சிறுகதைகள், கவிதை நூல்கள் உள்ளிட்ட நூல்களை பள்ளி, கல்லூரி மாணவா்கள் வாசித்து வருகின்றனா்.
தற்போதுள்ள நூலகக் கட்டடம் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளது, மழைக் காலங்களில் மழைநீா் ஒழுகுவதால் நூலகத்தில் உள்ள புத்தகங்கள் சேதமடைவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
அதேபோல், நூலகத்தில் புத்தகங்களை அடுக்கிவைக்க தேவையான இரும்பு தளவாடங்கள் இல்லாததால் சட்டையம்பட்டி நூலகத்துக்குக் கிடைக்க வேண்டிய நூற்றுக்கணக்கான நூல்கள் நூலகத் துறை வசமிருந்து கிடைக்கவில்லை என வாசகா்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி சட்டையம்பட்டி ஊா்புற நூலகத்துக்குத் தேவையான கட்டட வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.