தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் பேருந்துகள் இரவு வேளைகளில் நல்லம்பள்ளியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இணையதளம் வழியாக அனுப்பிய கோரிக்கை மனு: தருமபுரியிலிருந்து சேலத்துக்கு நல்லம்பள்ளி வழியாக ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நாள்தோறும் சென்று வருகின்றன. இப்பேருந்துகள் அனைத்தும் வருவாய் வட்ட தலைநகரமான நல்லம்பள்ளியில் நின்று, பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு செல்கின்றன.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் ஒரு சில தனியார் பேருந்துகள் நல்லம்பள்ளி நிறுத்தத்தில் நிற்காது என அப்பேருந்து நடத்துநர்கள், பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர். இதனால், தங்களது பல்வேறு பணிகள் முடிந்து இரவில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஊர் திரும்ப அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து நல்லம்பள்ளியில் இரவு நேரங்களில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.