குடும்பப் பாதுகாப்பு நிதியை பாகுபாடின்றி வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பெ.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர்கள் டி.கந்தசாமி, கே.கே.தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் எம்.சதாசிவம் பேசினார். இக்கூட்டத்தில், பணியில் உள்ள அரசு அலுவலர்களுக்கு வழங்குவதுபோல, ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கும் பாகுபாடின்றி குடும்பப் பாதுகாப்பு நிதியை வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடுத் திட்டத்துக்கு, மாதந்தோறும் ரூ.350 பிடித்தம் செய்வதைக் கைவிட்டு, மீண்டும் ரூ.150 மட்டும் பிடித்தம் செய்ய வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மாவட்டக் கருவூலம் வழியாகவே குடும்பப் பாதுகாப்பு நிதி வழங்கிட வேண்டும். மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பேருந்து பயணத்தில் 50 சதவீதக் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.