சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்த விவகாரத்தில் மறுசீராய்வு கோரி, தருமபுரியில் வெள்ளிக்கிழமை ஐயப்ப பக்தர்கள் பேரணியாக வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக ஐயப்ப பக்தர்கள் பேரவையின் தருமபுரி பிரிவு சார்பாக நடைபெற இந்தப் பேரணிக்கு, பேரவையின் நிறுவனத் தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். முன்னதாக, நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி, தருமபுரி சாலை விநாயகர் கோயில் அருகிலிருந்து பேரணியாகப் புறப்பட்டனர். இந்தப் பேரணி முக்கியச் சாலைகள் வழியாக வந்து, தருமபுரி தொலைத் தொடர்பு அலுவலகம் அருகே நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, அங்கு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், உலக இந்து மிஷன் தலைவர் வழக்குரைஞர் காவேரிவர்மன், குருசாமிகள், வேதகிரி, கைலாசம், முருகேசன், சுகுமார், மாதையன், சண்முகம் ஆகியோர் பேசினர்.
இதில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக, கேரள மாநில அரசு மறுசீராய்வு செய்ய வேண்டும். அனைத்து வயது பெண்களை பம்பை நதியில் நீராட அனுமதிக்கக் கூடாது. ஆகம விதிகளை மீறும் செயலில் ஈடுபடக் கூடாது. சபரிமலையில் தொன்றுதொட்டு வரும் வழக்கத்தை மாற்ற முயற்சிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.