தருமபுரி அருகே வந்த நாகர்கோவில் விரைவு ரயில் என்ஜினில் ஏற்பட்ட பழுதால் அந்த ரயில் தாமதமாக சென்றது.
நாகர்கோவிலில் இருந்து தருமபுரி வழியாக பெங்களூருக்கு நாள்தோறும் விரைவு ரயில் எண்: 17236 செல்கிறது. இந்த ரயில் வழக்கம் போல வியாழக்கிழமை இரவு நாகர்கோவிலிலிருந்து பயணிகளுடன் பெங்களூரை நோக்கி சென்றது.
இந்த ரயில், வெள்ளிக்கிழமை அதிகாலை 5.50 மணியளவில் தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த வே.முத்தம்பட்டி அருகே வந்த போது, திடீரென என்ஜினில் பழுது ஏற்பட்டு நின்றது. என்ஜின் ஓட்டுநர்கள் நீண்ட நேரம் முயற்சித்தும் பழுதை சரி செய்ய முடியாததையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, காலை 7.35 மணியளவில் ரயில் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. முத்தம்பட்டி வனப் பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் ரயில் நின்றதால், பயணிகள் பரிதவிப்புக்குள்ளாகினர்.