தருமபுரி அருகே வெங்கட்டம்பட்டியில் பட்டாபி ராமர் திருக்கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வெங்கட்டம்பட்டி கிராமத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீ பட்டாபி ராமர் திருக்கோயில் உள்ளது. இக் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா நடைபெற்று வருகிறது. மூன்று நாள்கள் நடத்தப்படும் இத் திருவிழாவில், முதல்நாளான கடந்த ஏப்.13-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு, ஸ்ரீ பட்டாபி ராமருக்கு ஜனன ஓமம், சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து, பட்டாபி ராமருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, விழாவின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (ஏப்.14), காலை 11 மணிக்கு, திருக்கோயில் அர்ச்சகர்கள் வேதமந்திரம் ஓத, ஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில், பட்டாபி ராமர், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, விழாக் குழு சார்பில், திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையடுத்து அன்றைய தினம் இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், மலர்கள் அலங்காரத்துடன் லட்சுமி அவதாரத்தில் சீதா ராமர் திருவீதி உலா, வாண வேடிக்கையுடன் நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான திங்கள்கிழமை அபிஷேக அலங்கார பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற உள்ளது.