பென்னாகரத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸை ஆதரித்து அகில பாரத சத்ரிய மகா சபையின் ஆலோசகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பேராசிரியர் தீரன் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியது:
தருமபுரி மாவட்ட மக்களின் 28 ஆண்டு கால கனவுத் திட்டமான தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதைத் திட்டம் தற்போது நிறைவேறியுள்ளது. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி. அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்யும் வேல்முருகன், சி.என்.ராமமூர்த்தி ஆகியோர் ஆதாயத்தோடு பிரசாரம் செய்து வருகின்றனர். தி.மு.க.வினர் பல்வேறு துறைகளில் ஊழல் செய்து சிறை சென்றுள்ளனர். அ.தி.மு.க. கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார்.
இந்த பிரசாரத்தில் பா.ம.க. துணைப் பொதுச் செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட பால்வளத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், பென்னாகரம் கூட்டுறவு சங்கத் தலைவர் கே.பி.ரவி, நகரச் செயலாளர் வினு மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.