ஸ்டாலின் பொய்யான தகவல்களைப் பேசி வருகிறார்: அன்புமணி ராமதாஸ்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு தொடர்பாக நாள்தோறும் பொய்யான தகவல்களைப் பேசிவருகிறார் என்றார் அன்புமணி ராமதாஸ். 


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு தொடர்பாக நாள்தோறும் பொய்யான தகவல்களைப் பேசிவருகிறார் என்றார் அன்புமணி ராமதாஸ். 
தருமபுரி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில், அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இவர், செவ்வாய்க்கிழமை பாலக்கோட்டில் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்த பின்பு,  செய்தியாளர்களிடம் கூறியது:  அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி விவசாயிகளின் கூட்டணி.  தி.மு.க. தலைமையிலான கூட்டணி முதலாளிகளின் கூட்டணி.  மொரப்பூர் - தருமபுரி ரயில் பாதைத் திட்டத்தைக் கொண்டு வந்தது பா.ம.க. தான்.  ஒகேனக்கல் காவிரியில் உபரியாகச் செல்லும் நீரை தருமபுரி மாவட்ட ஏரிகளுக்குக் கொண்டு செல்லும் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி,  தருமபுரி  மாவட்டத்தில் பா.ம.க. சார்பில், 10 லட்சம் கையெழுத்துகள் பெற்று,  முதல்வரிடம் அளித்துள்ளோம்.   இந்தத் திட்டத்துக்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.  தருமபுரியில் விரைவில் சிப்காட் தொழில் வளாகம் அமைத்து,   பன்னாட்டு நிறுவனங்களைக் கொண்டு வருவேன்.  தருமபுரியில் உணவுப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும்.  தருமபுரி மக்களவைத் தொகுதியில் நாங்கள் வலியுறுத்திய 14 நீர்ப்பாசனத் திட்டங்களில் 7 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  மீதமுள்ள 7 திட்டங்களும் விரைவில் நிறைவேறும்.  இத் திட்டங்கள் நிறைவேறிய பிறகு அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பிரச்னை தீரும்.  மக்களின் வாழ்வாதாரமும் உயரும்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நாள்தோறும் தமிழக அரசு குறித்து பொய்யான தகவல்களைப் பேசி வருகிறார். 8- வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக பேச ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை.  இந்தத் திட்டத்தில் பாதித்த விவசாயிகளையும் தி.மு.க. சந்திக்கவில்லை.  வழக்கும் தொடுக்கவும் இல்லை. ஆனால், தற்போது ஸ்டாலின் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.  இந்தத் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்று தடை உத்தரவைப் பெற்றோம்.  நீதிமன்ற உத்தரவை மதிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.  மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை விரைவில் சந்தித்து, 8- வழிச் சாலைத் திட்டம் குறித்துப் பேசி அதை நிறுத்த உள்ளோம்.  நீட் தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரஸும், தி.மு.க.வும் தான்.  நீட் தேர்வு தொடர்பாக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவர் பார்வைக்கு அனுப்பி,  தமிழகத்துக்கு விலக்கு பெற்று அதைச் சட்டமாக்குவோம்.  ஸ்டெர்லைட் ஆலை,  கச்சத்தீவு, காவிரி, மேக்கேதாட்டு அணை விவகாரம் ஆகியவற்றில் தமிழகத்துக்கு துரோகம் செய்தது தி.மு.க. தான்.  2006 - 2011காலத்தில் ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களின் பிரச்னைக்கு திமுக தீர்வு ஏற்படுத்தவில்லை.  எனவே, ஸ்டாலினுக்கு இத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com