தருமபுரியில் வழக்குரைஞர்கள் மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் மேற்கொண்டுள்ள திருத்தத்தை கைவிடக் கோரி, நீதிமன்றப் பணிகளை வெள்ளிக்கிழமை புறக்கணித்தனர்.
தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிமன்றம், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், விரைவு நீதிமன்றம், உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்கள் என 12-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், பல்வேறு வழக்குகள் தொடர்பாக சுமார் 400-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் ஆஜராகி வருகின்றனர்.
இந்த நிலையில், மோட்டார் வாகன விபத்து வழக்கு விசாரணையில் மேற்கொண்டுள்ள திருத்தத்தை கைவிட்டு, மீண்டும் பழைய முறையே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் கருணாநிதி தலைமையில், வெள்ளிக்கிழமை வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனர்.
இப்புறக்கணிப்புப் போராட்டம் சனிக்கிழமையும் தொடர்ந்து நடைபெறும் என வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.