தருமபுரியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ.60 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையாகின.
தகடூர் புத்தகப் பேரவை சார்பில், தருமபுரியில் இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற்றது. கடந்த ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி, ஆக.4-ஆம் தேதி வரையிலான 10 நாள்கள்
தருமபுரி பாரதிபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில்
புத்தகத் திருவிழா நடைபெற்றது.
இதில் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் உள்ளிட்ட பல்வேறு பதிப்புகள் மற்றும் தினமணி நாளிதழ் உள்ளிட்ட பிற நாளிதழ்கள், வார இதழ்கள் சார்பிலும், தருமபுரி மாவட்ட படைப்பாளர்கள் விற்பனை நிலையம், திருவள்ளுவர் பொத்தக நிலையம், நூல் அங்காடி என மொத்தம் 53 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
புத்தகத் திருவிழாவையொட்டி நாள்தோறும் கருத்தரங்கம், கவியரங்கம், நூல் வெளியீடுகள், குறந்தகடு வெளியீடு உள்ளிட்ட நிகழ்வுகளும், அதைத் தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவாளர்கள் உரை நிகழ்வுகளும் நடைபெற்றன.
இப்புத்தகத் திருவிழாவில் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், அரசு பள்ளி மாணவ, மாணவியர், நூல் ஆர்வலர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் தங்களுக்கு தேவையான, இலக்கியம், ஆன்மிகம், வரலாற்றுப் புத்தகங்கள், சிறுவர் கதைகள், தலைவர்களின் வரலாறு என பல்வேறு வகையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
இதில் 10 நாள்களில் ரூ.60 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தகடூர் புத்தகப் பேரவையினர் தெரிவித்தனர். புத்தத் திருவிழா நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மழலையர் மற்றும் சிறுவர்களுக்கு பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் சிறப்பிடம் வகித்தவர்களுக்கு பாராட்டு
தெரிவிக்கப்பட்டது.