தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய், சிசு உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம், செக்கோடி ஆலமரத்துக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி காந்தி. இவரது மனைவி ஜோதி(29) பிரசவத்துக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு, அறுவைச் சிகிச்சை மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
சிறிது நேரத்திலே அக் குழந்தை உயிரிழந்தது. மேலும், ஜோதியின் உடல்நலமும் பாதிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனால், அவர் உயிரிழந்தார். மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே தனது மனைவி, குழந்தை உயிரிழந்ததாகக் கூறி, காந்தி மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வட்டாட்சியர் சுகுமார், துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால், அப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.