அரூர் அருகே தார்ச்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரூர் - தீர்த்தமலை நெடுஞ்சாலையில் இருந்து கீழானூர், கொத்தனாம்பட்டி செல்லும் இணைப்புச் சாலையானது 2.6 கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகும். இந்த சாலையை பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டத்தின்கீழ், ரூ. 87 லட்சம் மதிப்பீட்டில் தார்ச் சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டதாம். இந்த நிலையில், இன்னும் ஜல்லிக் கற்கள் பரப்பி, தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போது பருவ மழைக்காலம் தொடங்கும் நேரம் என்பதால், மழையில் போடப்படும் தார்ச் சாலைகள் தரமானதாக இருக்காது என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். மேலும், சாலையோரத்தில் நீண்ட நாள்களாக ஜல்லிக் கற்கள் கொட்டி வைக்கப்பட்டிருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். எனவே, கீழானூர் மற்றும் கொத்தனாம்பட்டி செல்லும் இணைப்புச் சாலையின் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.