ஒகேனக்கல்லில் நீர்வரத்து 75ஆயிரம் கன அடியாகக் குறைந்தது 

கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடுவது குறைந்துள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து செவ்வாய்க்கிழமை மாலை நொடிக்கு 75 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடுவது குறைந்துள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து செவ்வாய்க்கிழமை மாலை நொடிக்கு 75 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.
 காவிரி ஆற்றில் நீர்வரத்துக் குறைந்துள்ளதால், வெள்ளத்தினால் மூழ்கியிருந்த அருவிகள் வெளியே தெரிகின்றன. மேலும், அருவிகளில் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் மாவட்ட நிர்வாகம் 6 ஆவது நாளாக தடை விதித்துள்ளது.
 கர்நாடகத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதி மற்றும் கேரளத்தின் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வந்தன. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் 3 லட்சம் கன அடி வரை திறந்துவிடப்பட்டது. இந்த உபரிநீர் திங்கள்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 2.85 கன அடியாக தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
 தற்போது கர்நாடகம் மற்றும் கேரளப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நொடிக்கு 2.10 லட்சம் கனஅடியாகவும், 11 மணி நிலவரப்படி நொடிக்கு 1.95 லட்சம் கன அடியாகவும், பிற்பகல் 2 மணி நிலவரப்படி 1.75 லட்சம் கன அடியாகவும், மாலை 6 மணி நிலவரப்படி நொடிக்கு 75 ஆயிரம் கன அடியாகவும் நீர்வரத்து குறைந்துள்ளது. காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்துக் குறைந்துள்ள நிலையில், வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளான சத்திரம், நாகர் கோவில், ஊட்டமலை, நாடார்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகள் வெளியே தெரிய தொடங்கியுள்ளன. மேலும், காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து காண்காணித்து வருகின்றனர்.
 நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் 6 ஆவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒகேனக்கல்லில் வருவாய்த் துறையினர், வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். 50- க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com