கடத்தூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.பானு சுஜாதா தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினர் கடத்தூர் நகர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவகங்கள், பேக்கரிகள், பல்பொருள் அங்காடிகள், தேநீர் கடைகள் உள்ளிட்டவைகளில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறதா குறித்தும், உணவு பொருள்களில் கலப்படம் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து, உணவகங்களில் வாழை இலைகள், பாக்கு மட்டைகளைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதில், மொரப்பூர் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் கே. நந்தகோபால், கடத்தூர் பேரூராட்சிப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.