இருகூர் முதல் தேவனகுந்தி வரையிலும் விவசாய நிலங்கள் வழியாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து தருமபுரி ஒளவை நகரில் உள்ள அதிகாரம் பெற்ற அலுவலரான துணை ஆட்சியர் ஆர்.புஷ்பாவிடம் தமிழக உழவர் முன்னணியின் பொதுச் செயலர் தூருவாசன், ஆலோசகர் கோ.மாரிமுத்து ஆகியோரது தலைமையில் விவசாயிகள் அளித்துள்ள மனு விவரம் :
கோயமுத்தூர் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரையிலும் விவசாய நிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்க பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒடையாண்டஹள்ளி, எச்சனஹள்ளி, எதிர்கோட்டை, ராயக்கோட்டை, பழையூர், நெல்லூர், கொப்பக்கரை, கடவரஹள்ளி, பண்டப்பட்டி, ஆழமரத்துக்கொட்டாய், சீபம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் அறிவிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இதனால் இப் பகுதியிலுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும். எனவே, இந்தத் திட்டத்தை கேரள மாநிலத்தில் இருப்பதை போன்று சாலையோரத்தில் அமைக்க வேண்டும். விவசாயிகளின் எதிர்கால தலைமுறைகள் அழிந்துவிடும் என்பதால் விவசாயிகள் தங்களின் நிலங்களை தர இயலாது எனவும் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.