கடத்தூரில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை அகற்றினர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் நகரில் சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும்,
இதனால் கடத்தூர் - பொம்மிடி, தருமபுரி சாலையில் போக்குவரத்து நெரிசல் இருப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி உத்தரவின்படி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் ஜி.புண்ணியக்கோட்டி தலைமையில், வருவாய்த்துறை மற்றும் கடத்தூர் பேரூராட்சி பணியாளர்கள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
கடத்தூர் பேருந்து நிலையங்கள், தருமபுரி சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகள் அகற்றினர்.
இதில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் செழியன், செயல் அலுவலர் மா.ராஜா ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் எழில்மொழி, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்பாபு, இளநிலை உதவியாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.