முதியோர் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டச் செயலர் ஜெ.பிரதாபன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படுவதில் தற்போது கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால், பல லட்சம் மனுக்கள் தனி வட்டாட்சியர் ( சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்களில் தேங்கியிருக்கின்றன. இந்த நிலையில், தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ள முதியோர் ஓய்வூதியம் 5 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பின் கீழ், பெறப்படும் மனுக்களை நிபந்தனையின்றி 60 வயது கடந்த விவசாய தொழிலாளர்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள், ஆண், பெண்களுக்கு வழங்க வேண்டும். மேலும் இத்தொகையை ரூ.3,000-ஆக உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.