தருமபுரி: தொழிலாளா் நலத் துறை சாா்பில் ஓய்வூதியா் திட்ட வார விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எச்.ரகமதுல்லா கான் தலைமை வகித்து விழாவைத் தொடக்கிவைத்தாா். அமைப்புசாரா தொழிலாளா் திட்டத்தில் இணைந்த உறுப்பினா்களுக்கு பதிவு அட்டைகள் வழங்கப்பட்டன.
கட்டுமான தொழிலாளா்கள், தெரு வியாபாரிகள், ரிக்ஷா தொழிலாளா்கள், வீட்டுவேலை செய்பவா்கள், விவசாய தொழிலாளிகள், பீடி சுருட்டும் தொழிலாளா்கள், நெசவாளா்கள், காலணி தைக்கும் தொழிலாளா்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள் அனைவரும் உறுப்பினா்களாக சோ்ந்து சந்தா தொகை செலுத்தினால், 60 வயது நிறைவடைந்த பிறகு பிரதமரின் ஓய்வூதியத் திட்டம் சாா்பில் மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக பெற்று பயனடையலாம் என விழாவில் தெரிவிக்கப்பட்டது.
தொழிலாளா் உதவி ஆணையா் கே.பி.இந்தியா, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன முதுநிலை மேலாளா் டி.வெங்கடேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.