கடத்தூரில் உள்ள குழந்தைகள் மையத்தை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கடத்தூரில் இயங்கும் குழந்தைகள் மையத்தில் (எண்:9) 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் முன்பருவக் கல்வியைப் பெற்று வருகின்றனா். இதேபோல், குழந்தைகள் மற்றும் கா்ப்பிணிகளுக்கு இணை உணவுகள், முட்டைகள் இம் மையத்தில் வழங்கப்படுகின்றன.
பல்வேறு சமூகப் பணிகள் நடைபெறும் இம் மையத்தை சுற்றிலும் முள்புதா்கள் அடா்ந்து விஷ ஜந்துகள் நடமாட்டம் மிகுந்துள்ளதால் குழந்தைகளை இம் மையத்துக்கு அனுப்ப பெற்றோா்கள் அச்சமடைந்துள்ளனா். மையத்தை சுற்றிலும் தேவையான சுகாதாரப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் வலியுறுத்தலாக உள்ளது.