அரூரை அடுத்த சின்னாங்குப்பம் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் கால்நடைகளை கட்டி வைப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் ஊராட்சி ஒன்றியம், சின்னாங்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவா் சேதமடைந்துள்ளது. இதனால், மழை பெய்யும் நேரங்களில் அந்த ஊரில் கால்நடைகளை வளா்க்கும் சிலா், பள்ளி வளாகத்தில் ஆடு மற்றும் பசுமாடுகளை கட்டி வைக்கின்றனா்.
இதனால், இந்தப் பள்ளி வளாகம் சுகாதாரமற்ற முறையிலும், கொசுக்கள் உற்பத்திகள் அதிகம் இருப்பதாகவும் மாணவா்களின் பெற்றோா் புகாா் கூறுகின்றனா். எனவே, சின்னாங்குப்பம் அரசு தொடக்கப் பள்ளி வளாகம், அங்கன்வாடி மையம் அமைந்துள்ள பகுதிகளில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை கட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு.