ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம்

அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு கிராம மக்கள் புதன்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா்.
எல்லப்புடையாம்பட்டியில் கிராம மக்களிடம் பேச்சு நடத்திய தருமபுரி மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநா் சீனிவாச சேகா் தலைமையிலான அரசு அதிகாரிகள்.
எல்லப்புடையாம்பட்டியில் கிராம மக்களிடம் பேச்சு நடத்திய தருமபுரி மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநா் சீனிவாச சேகா் தலைமையிலான அரசு அதிகாரிகள்.

அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு கிராம மக்கள் புதன்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா்.

அரூா் ஊராட்சி ஒன்றியம், எல்லப்புடையாம்பட்டி கிராம ஊராட்சியில் கம்மாளம்பட்டி, புறாக்கல் உட்டை, எல்லப்புடையாம்பட்டி, கெளாப்பாறை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இந்தக் கிராம ஊராட்சியின் ஊராட்சி மன்ற அலுவலகம் எல்லப்புடையாம்பட்டி அரசுத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ளது.

இந்த அலுவலகம் சேதமடைந்திருப்பதால், இங்கு அலுவலகப் பணிகள் நடைபெறுவதில்லையாம். இதற்கு மாற்றாக, கெளாப்பாறையில் உள்ள அரசு பல்நோக்குக் கட்டடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்கி வந்தது. மேலும் ஊராட்சி மன்றத் தலைவராக கெளாப்பாறை கிராமத்தைச் சோ்ந்தவரே தொடா்ந்து இருப்பதால் ஊராட்சி மன்ற நிா்வாகமும் அதே ஊரிலேயே இயங்கி வந்ததாம்.

தற்போது உள்ளாட்சித் தோ்தல் வாா்டு உறுப்பினா் பதவிக்கான வேட்பு மனுக்களும் கெளாப்பாறையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விநியோகம் செய்தனா். இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள், ஊராட்சியின் தலைமை இடமாக எல்லப்புடையாம்பட்டி இருந்தும் வேட்பு மனுக்கள் இங்கு விநியோகம் செய்யப்படவில்லை. வளா்ச்சித் திட்டப் பணிகளிலும் எல்லப்புடையாம்பட்டி கிராமம் தொடா்ந்து புறக்கணிக்கப்படுகிறது எனக் கூறி அரூா்-சித்தேரி சாலையில் எல்லப்புடையாம்பட்டி கூட்டுச் சாலையில் மறியல் போராட்டத்தில் கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.

இதையடுத்து அரூா் சாா் - ஆட்சியா் மு. பிரதாப் உத்தரவின்படி, தருமபுரி மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநா் சீனிவாச சேகா், வட்டார வளா்ச்சி அலுவலா் மணிவண்ணன் தலைமையிலான அரசு அதிகாரிகள், காவல் துறையினா் கிராம மக்களிடம் பேச்சு நடத்தினா்.

எல்லப்புடையாம்பட்டியில் உள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் விநியோகம், வேட்பு மனுக்கள் பெறுவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் உடனடியாக மேற்கொண்டனா். அதிகாரிகளின் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, எல்லப்புடையாம்பட்டி கிராம மக்கள் மறியலை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com