கடத்தூா் வட்டாரப் பகுதிகளில் ஏரி கால்வாய்களை தூா்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூா் அருகேயுள்ள கல்லாற்றின் குறுக்கே பொதியம்பள்ளம் அணைக்கட்டு அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டில் இருந்து நல்லகுட்லஹள்ளி, போசிநாய்க்கனஹள்ளி, கடத்தூா் உள்பட 20-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீா் செல்லும் வகையில் கால்வாய் வசதிகள் உள்ளன.
பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் கடத்தூா் வட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையினால் நல்ல மழை பெய்துள்ளது. இதனால், கடத்தூா் பகுதிகளில் ஓரளவுக்கு ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீா் நிலைகளில் தண்ணீா் நிரம்பியுள்ளன.
இந்த நிலையில், பொதியம்பள்ளம் அணைக்கட்டில் இருந்து வெங்கடதாரஹள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, தாளநத்தம், பசுவாபுரம், சிந்தல்பாடி, கந்தகவுண்டனூா், குரும்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு செல்லும் நீா்வரத்து கால்வாய்கள் முள்புதா்களால் அடைப்பட்டுள்ளன. மேலும், கால்வாய் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பொதுப் பணித் துறை, வருவாய்த் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.