தருமபுரி நகராட்சியில் கட்டணம் செலுத்தாத 58 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
தருமபுரி நகராட்சி ஆணையர் ரா.மகேஸ்வரி மற்றும் அலுவலர்கள் 17 - ஆவது வார்டுக்குள்பட்ட பகுதியில் குடிநீர் உள்ளிட்ட நிலுவை வரிகளை வசூலிக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த இணைப்புகளை துண்டித்தனர். மேலும், நகராட்சியில் உள்ள 15 வார்டுகளில் கட்டணம் செலுத்தாத 58 குடிநீர் இணைப்புகள் இதுவரை துண்டிக்கப்பட்டுள்ளன.
எனவே, தருமபுரி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளிலும் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய கடை வாடகை, புதைச் சாக்கடை கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்ட நிலுவையிலுள்ள அனைத்து கட்டணங்களையும் நகராட்சிக்கு உரிய காலத்தில் செலுத்த வேண்டும். தொடர்ந்து கட்டணங்களை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என ஆணையர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, தருமபுரி நகராட்சியில் மேற்கொள்ளப்படும் துப்புரவுப் பணிகள், அதற்கு பயன்படுத்தும் வண்டிகள் ஆகியவற்றை அவர் நேரில் பார்வையிட்டார்.