போலியாக வட்டாட்சியர் அலுவலக முத்திரை தயாரிப்பு: ஒருவர் கைது
தருமபுரி மாவட்டம், அரூரில் போலியாக வட்டாட்சியர் அலுவலக முத்திரைகளை தயாரித்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
அரூர் வர்ணதீர்த்தம் பகுதியில் உள்ள முத்திரைகள் தயாரிக்கும் கடையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், அரூர் வட்டாட்சியர் அலுவலக முத்திரைகளை தயாரிக்க ஆர்டர் அளித்துள்ளார். இது குறித்து, சந்தேகமடைந்த வருவாய்த் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இதுபோல போலியாக செய்த அலுவலக முத்திரைகள் மூலம் முறைகேடாகச் சான்றுகள் தயாரித்து வந்தது தெரியவந்தது.
இது குறித்து, அரூர் கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, போலியாக வட்டாட்சியர் அலுவலக முத்திரைகள் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக டி.ஆண்டியூரைச் சேர்ந்த மாது (35) என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 2 போலி முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.