தருமபுரி வெண்ணாம்பட்டி அருகே சீரான குடிநீர் விநியோகம் கோரி, அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வெண்ணாம்பட்டி அருகேயுள்ள வி.ஜெட்டிஅள்ளி பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாள்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலி குடங்களுடன் வெண்ணாம்பட்டி - தருமபுரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து, தகவல் அறிந்த, தருமபுரி நகர போலீஸார் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், சீரான குடிநீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, சமாதானம் அடைந்த அவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் தருமபுரி-வெண்ணாம்பட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.