அரூரில் முருகர் கோயில் தெருவில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அரூர் ஊராட்சி ஒன்றியம், மோப்பிரிப்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது முருகர் கோயில் தெரு. இந்தத் தெருவில் 1000 - க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்புப் பகுதிக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளைக் கிணறு, மின் மோட்டார் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த குடி நீரானது உப்பு தன்மையுடையதாக இருப்பதாக பொது மக்கள் கூறுகின்றனர். இதனால், இப் பகுதியிலுள்ள மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், செக்காம்பட்டியில் இருந்து முருகர் கோயில் தெருவுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் குழாய் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த குழாய் இணைப்புகள் அண்மையில் சாலை அமைக்கும் பணியின் போது சேதம் அடைந்தாக தெரிகிறது. எனவே, சேதமடைந்துள்ள குடிநீர் குழாய் இணைப்புகளை சீரமைப்பு செய்து, முருகர் கோயில் தெருவுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க மோப்பிரிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின்
எதிர்பார்ப்பு.