அரூர், கடத்தூரில் தகுதிச் சான்று மற்றும் வரி செலுத்தாத 9 வாகனங்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
அரூர், கடத்தூர் வட்டாரப் பகுதிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீசெல்வம் தலைமையிலான அரசு அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு லாரியானது தமிழகத்துக்கான வரி செலுத்தாமல் செல்வது தெரியவந்தது.
அதேபோல், உரிய தகுதிச் சான்று, ஓட்டுநர் உரிமம், மினி சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது உள்ளிட்ட பிற காரணங்களுக்காக 6 ஆட்டோக்கள், 2 மினி சரக்கு வாகனம், லாரி உள்ளிட்ட 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் கூறுகையில், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது. விதிகளை மீறி பயணிகளை ஏற்றிச் சென்றால், அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும். எனவே, வாகன ஓட்டுநர்கள் சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.